முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட ஏழுபேரை அழைக்கும் திகதியை நாளை 13ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக, வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி ஷிரான் குணரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன், முறைப்பாட்டாளர், பத்திரிகைளில் பொது விழிப்புணர்வு விளம்பரம் வழங்குவது தொடர்பிலும் அன்றைய தினம் அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி அறிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களைப் பயன்படுத்தி, அச்சபைக்குச் சேர வேண்டிய 142 மில்லியன் ரூபாயைச் செலுத்தத் தவறியமைக்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட ஏழு பேருக்கு எதிராக கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இவ்வழக்குத் தொடர்பாகக் கூடுதல் ஆதாரங்களைச் சேர்ப்பதற்குரிய நாளாக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி ஷிரான் குணரத்ன நவம்பர் 11ஆம் திகதியை நிர்ணயித்திருந்தார்.
கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, அப்போது ஜனாதிபதி வேட்பாளராகவிருந்த, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்கு மக்களைக் கொண்டுசெல்லவே இந்த பஸ்கள் பயன்படுத்தப்பட்டன.
இலங்கைப் போக்குவரத்துச் சபை, இந்த வழக்கை சோமரத்ன அசோசியேட் ஊடாகத் தாக்கல் செய்திருந்தது.