முன்னாள் போக்குவரத்து அமைச்சருக்கு நிபந்தனைகளுடன் பிணை

முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம, 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணை மற்றும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில், கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டியவினால் இன்று செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு உபதலைவர்களை நியமிக்கும் போது ஊழல் இடம்பெற்றதாக கூறி, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, முன்னாள் போக்குவரத்து அமைச்சருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்திருந்தது.

நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம், முன்னாள் அமைச்சர் குமார் வெல்கம நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார் என்பதுடன் மேலதிக விசாரணைகள் மார்ச் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.