மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாலிங்க கட்டாயம் – இலங்கை கிரிக்கெட் சபைக்கு BCCI வலியுறுத்து..

(FASTNEWS | COLOMBO) – இந்தியன் பிரிமியர் லீக் (IPL) போட்டித் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்து கொள்வதற்கு இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணித்தலைவர் லசித் மாலிங்க இந்தியா பயணமாகியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள சூப்பர் மாகாண ஒருநாள் கிரிக்கட் தொடரில் இலங்கை அணி வீரர்கள் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த காரணத்தால் , மாலிங்க ஐபிஎல் போட்டித் தொடரின் முதல் 6 போட்டிகளில் தான் பங்கேற்கப்போவதில்லை என தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும் , ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் இடம்பெறும் போது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் சூப்பர் மாகாண கிரிக்கெட் தொடர் குறித்து எவ்வித அறிவிப்பும் வௌியிடப்படவில்லை என மும்பை இந்தியன்ஸ் அணியின் பிரதான பயிற்சியாளர் மஹேல ஜயவர்தன தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் , குறித்த பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தலையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலைமை தொடர்பில் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை இலங்கை கிரிகட் நிறுவனத்தை கடுமையாக விமர்சித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.