மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் சிறை தண்டனை பெற்று, புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹிந்தி நடிகர் சஞ்சய் தத், இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மும்பையில் கடந்த 1993ஆம் ஆண்டு இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பில், பொதுமக்கள் 257பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவ விசாரணையில் சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்துக்காக நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு மும்பை தடா நீதிமன்றம் 6 வருட சிறை தண்டனை விதித்தது. பின்னர், கடந்த 2013ஆம் ஆண்டு, அவரது சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் 5 வருடங்களாகக் குறைத்து உத்தரவிட்டிருந்தது.
நடிகர் சஞ்சய் தத், ஏற்கெனவே ஒன்றரை வருடம் தண்டனையை அனுபவித்து விட்டதால், எஞ்சிய மூன்றரை வருடங்கள் சிறை வாசத்துக்காக சரண் அடைந்தார். இந்நிலையில் அவரை விடுதலை செய்ய முடிவு செய்த மஹாராஷ்ட்ர அரசாங்கம் இன்று காலை விடுதலை செய்தது.
நல்லொழுக்கம் மற்றும் சிறையில் வழங்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்தது ஆகியவற்றை கருத்தில் கொண்டு மன்னிப்பு அடிப்படையில் 8 மாதங்களுக்கு முன்கூட்டியே அவரை விடுவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.