முறைப்பாடுகளை தொடர்ந்து தரம் 1, மாணவர்கள் சேர்த்தல் தொடர்பில் கல்வியமைச்சரின் பணிப்புரை…

2019ம் கல்வியாண்டிற்காக முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்க்கும் போது முரண்பட்ட புள்ளிகளை சமர்ப்பித்தல் மற்றும் காட்சிப்படுத்தப்பட்ட பல சம்பவங்கள் தொடர்பில் ஆராயுமாறு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கல்வியமைச்சிற்கு கிடைக்கப்பெற்றுள்ள பல முறைப்பாடுகளை கவனத்தில் கொண்டு குறித்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தால் தகவல் அறியும் உரிமை சட்டமூலம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சில பாடசாலையின் பொறுப்பான அதிகாரிகள் வேண்டுமென்றே பொறுப்பற்ற விதமாக இவ்வாறு முரண்பட்ட புள்ளிகளை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளமை ஒருபோதும் ஏற்க முடியாது என கல்வியமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான நேர்முக பரீட்சை வெளிப்படையாக மற்றும் நியாயமாக இடம்பெறுகிறதா என அவதானம் செலுத்துமாறும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.