வடக்கு மாகாணத்திலிருந்து விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி கொழும்பு மருதானை ஸாஹிராக் கல்லூரிக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை (23) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
இதேவேளை கிண்ணியா, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை மற்றும் கல்முனை ஆகிய பகுதிகளிலும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இது தொடர்பில் முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு மற்றும் தேசப்பற்றுள்ள இளைஞர் அமைப்பு ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவிக்கப்பட்டுள்ளதாவது,
வடக்கு மாகாணத்திலிருந்து 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் விடுதலைப் புலிகளினால் இனச் சுத்திகரிப்பின் பேரில் சொந்த இடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 25 வருடங்கள் ஆகின்றன.
கால் நூற்றாண்டு காலமாக சொல்லெனா துயரங்களுடன் அம்மக்கள் இன்றும் புத்தளம், குருநாகல், அநுராதபுரம், நீர்கொழும்பு, கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் அகதி எனும் அவல வாழ்வை அனுபவிக்கின்றனர்.
யுத்த சூழ்நிலைகள் காரணமாக தமது மீள்குடியேற்றம் சாத்தியமில்லை என செய்வதறியாது இருந்த மக்களுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு தமது சொந்த இடத்திற்கு செல்லும் நாட்கள் அருகில் இருக்கின்றது என்கிற நம்பிக்கை பிறந்தது. பல கரும் நிகழ்வுகளை ஏற்படுத்திய யுத்தம் நிறைவுக்கு வந்து 6 ஆண்டுகள் கடந்த நிலையிலும் வடக்கு மாகாணத்தை சேர்ந்த அப்பாவி முஸ்லிம்களின் கணவுகள் இன்னும் நனவாகவில்லை.
இந்நிலையில் அம்மக்களின் மீள்குடியேற்ற விடயத்தில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் தமக்குரிய பொறுப்புகளை சரிவர நிறைவேற்றாததன் காரணமாக அனைத்து விடயங்களும் ஸ்தம்பித்து காணப்படுகின்றது. இதற்கு எமது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம் என அக்குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.