இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் மகனான யாய்ர் நேதன்யாகு முஸ்லிம்களுக்கு எதிராக முகநூல் கணக்கில் பதிவொன்றினை பதிவிட்டதால் அவரது முகநூல் கணக்கினை முகநூல் நிறுவனம் முடக்கி வைத்தது.
சமீபத்தில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த இரு பொலிஸார்கள் கொல்லப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் வகையில் யாய்ர் நேதன்யாகு தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.
” 1. இஸ்ரேல் மண்ணை விட்டு யூதர்கள் அனைவரும் வெளியேறும் வரை..
2. இஸ்ரேல் மண்ணை விட்டு முஸ்லிம்கள் அனைவரும் வெளியேறும் வரை.. இந்த நாட்டில் அமைதி இருக்காது.
நான் இரண்டாவதை நம்புகிறேன்..” என அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவு வெளியான சில நிமிடங்களில் யாய்ர் நேதன்யாகுவின் முகநூல் பக்கம் முடக்கப்பட்டது. பின்னர், சர்ச்சைக்குரிய அந்த கருத்து நீக்கப்பட்டு சுமார் 24 மணி நேரத்துக்கு பின்னர் அந்த பக்கம் செயல்பட தொடங்கியது.
இதுதொடர்பாக மீண்டும் கருத்து தெரிவித்த யாய்ர் நேதன்யாகு;
“முகநூல் பொலிஸ் என்னை கண்டுபிடித்து விட்டது, வாழ்த்துகள்! கருத்து சுதந்திரம் என்ற முத்திரையுடன் இவற்றை எல்லாம் அனுமதிக்கும் முகநூல் பொலிஸ் என்னை கண்டுபிடித்து எனது கணக்கை முடக்கியது கண்டனத்துக்குரியது..” என அந்த பதிவில் யாய்ர் குறிப்பிட்டுள்ளார்.