மூதூர் பீ.கே. பவுண்டேஸனின் ஏற்பாட்டில் மூதூர் பொது மைதானத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற பாராட்டு விழா, சன்மார்க்க அறிஞர்களது பலத்த கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
பவுண்டேஸனின் தலைவர் பீ.கே.கலீல் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் நூற்றுக்கும் அதிகமான இறைபணியாளர்களும் கலந்துகொண்டனர். இந்நிலையில் இஸ்லாமிய வழிகாட்டலுக்கு முரணான வகையில் விழா நிகழ்சிகள் நடத்தப்பட்டமை தொடர்பாகவே பலத்த கண்டனம் எழுந்துள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட இறைபணியாளர்கள் பங்கேற்ற இவ்விழாவில் பிரதம அதிதிகள் இஸ்லாத்திற்கு முரணான முறையில் வரவேற்கப்பட்டதாகவும் இஸ்லாத்திற்கு முராணான நடன நிகழ்ச்சிகள் மேடையில் அரங்கேற்றப்பட்டதாகவும் 4.00 மணியளவில் இடம்பெறுமென குறிப்பிடப்பட்ட விழா 6.00 மணிக்கு சற்று முன்னதாக ஆரம்பிக்கப்பட்டு மஹ்ரிப் தொழுகைக்கு இடைவேளை வழங்காது நிகழ்சிகள் தொடராக இரவு 9.00 மணி வரை நடத்தப்பட்டதாகவும் சன்மார்க்க அறிஞர்கள் சுட்டிக்காட்டினர்.
அத்தோடு இஸ்லாத்திற்கு எதிராக நிகழ்ச்சிகள் இடம்பெற்ற அதேமேடையில் இறைபணியாளர்களை கௌரவித்தமையும் புனித குர்ஆன் பிரதிகள் வழங்கப்பட்டமையும் எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடமல்லவெனவும் சன்மார்க்க அறிஞர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.