மூன்று பிள்ளைகள் கணவனால் துஷ்பிரயோகம்

* விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி
* சம்பவத்தை மூடிமறைத்த அதிகாரிகளும் விசாரணை

மனைவி தனது மூன்று பிள்ளைகளையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்த கணவன் மற்றும் அதனை மூடி மறைந்த பொலிஸ் அதிகாரிகளுக்கெதிராக மனைவியினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கை விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி இந்த வழக்கு 2016 ஆம் ஆண்டு மார்ச் 09 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்த மனுவினை ஆராய்ந்த பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன், நீதிபதி பிரியந்த தெப், நீதிபதி அனில் குணரட்ன ஆகியோர் சம்பவம் தொடர்பிலான முறைப்பாட்டினை விசாரணை செய்யாமல் மூடிமறைத்த பெண் பொலிஸார் மற்றும் சிறுவர்களுக்கான பணியகத்தின் பொறுப்பதிகாரி மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆகியோர் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ அறிக்கைகளை சட்ட மா அதிபருக்கு அனுப்புமாறும் உச்ச நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தனது முறைப்பாட்டினை மாரவில பொலிஸார் விசாரணை செய்ய மறுத்ததாகவும், சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதனை பொலிஸ் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பணியகத்தில் பல தடவைகள் முறைப்பாடு செய்த போதும் அவர்கள் தனது கணவருக்கு சார்பாகவே நடந்து கொண்டதாகவும் தனது முறைப்பாட்டினை ஏற்க மறுத்த தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, முறைப்பாடு செய்தால் தனக்கு குந்தகம் ஏற்படுத்தப்படுமென அச்சுறுத்தியதாகவும் மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மனுதாரர் கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் திகதியன்று உச்ச நீதிமன்றத்தில் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவினை தாக்கல் செய்துள்ளார். மேலும் இந்த மனுவில் தனக்கு ஏற்பட்ட நியாயமற்ற செயற்பாடுகளுக்காக பொலிஸ் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பணியகப் பணிப்பாளர்.

அதன் பொறுப்பதிகாரி, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர், அதன் விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி, மாரவில பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் மா அதிபர், சட்டமா அதிபர் மற்றும் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டவர் ஆகியோர் பொறுப்புக் கூற வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் தனது கணவர் தன்னுடன் முறைகேடாக நடந்துகொண்டதுடன் தனது நண்பர்களுடனும் தன்னை பகிர்ந்துகொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னை ஒரு விபச்சாரியைப் போல கணவன் நடத்தி வந்த நிலையில், தனக்கு அச்சந்தர்ப்பத்தில் உதவியளிக்க யாரும் இருக்காததால் தான் செய்வதறியாது, கோட்டை ஸ்ரீலங்கா டெலிகொம் தலைமையகத்திற்கு அடுத்துள்ள பாலத்திற்கு மேலேயிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றேன். அப்போது அவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு முன்னால் ஆஜர் செய்யப்பட்டேன்.

அத்துடன் தனது கணவரினால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மூன்று பிள்ளைகளும் பாரிய மன உளைச்சலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் தனது கணவன் அரசாங்க அதிகாரிகளை விலைக்கு வாங்கியதன் மூலம் சட்ட நடவடிக்கைகளை மாற்றியமைத்து தனக்கெதிராக போலியான குற்றச்சாட்டுக்களை கொண்டுவந்திருப் பதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தனது 03 பிள்ளைகளையும் துஷ்பிரயோகம் செய்த கணவனை கைதுசெய்து உரிய விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸ் மா அதிபரை பணிப்புரை விடுக்குமாறே பாதிக்கப்பட்ட மனைவி நீதிமன்றத்தை கோரியுள்ளார். அத்துடன் தனது கணவருக்கு சார்பான வகையில் போலியான ஆவணங்களை தயாரித்தமைக்காக மேற்படி பொலிஸ் அதிகாரிகளுக்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை தனக்கு நிகழ்ந்துள்ள இந்த அநியாயத்துக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களிடமிருந்து 05 மில்லியன் ரூபா நட்டஈடாக பெற்றுத்தர வேண்டு மெனவும் அவர் தெரிவித்துள்ளார்.