மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இறுதி டெஸ்ட் – 200 ஓட்டங்களுடன் சுருண்டது இலங்கை

மேற்கிந்திய தீவுகள்- இலங்கை அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பு ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தொடக்கமே இலங்கை அணிக்கு அதிர்ச்சியாய் அமைந்தது.

தொடக்க வீரர் சில்வா தான் சந்தித்த முதல் பந்திலேயே டெய்லரின் பந்து வீச்சில் டக் அவுட் ஆகினார்.

இதனையடுத்து நிதானமாக விளையாடி வந்த கருணாரத்னே மற்றும் மெண்டீஸ் அடுத்தடுத்து தலா 13 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினர்.

இதனையடுத்து வந்த வீரர்களும் நிலைக்கவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்ததால் இலங்கை அணி 200 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இலங்கை தரப்பில் மிலிந்த சிறிவர்தன அதிகபட்சமாக 68 ஓட்டங்கள் எடுத்தார். அறிமுக சுழற்பந்து வீச்சாளர் ஜோமல் வார்கன் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி முதல் நாள் ஆட்ட நேரமுடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 17 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இன்று 2வது நாள் ஆட்டத்தில் துடுப்பெடுத்தாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி திணறி வருகிறது.  4 விக்கெட்டுக்கு 82 ஓட்டங்கள் எடுத்துள்ளது. பிரசாத் 3 விக்கெட்டை எடுத்துள்ளார்.