(FASTNEWS|COLOMBO) – அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கேல் ஆர். பொம்பேயோ இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பனவை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கையில் கடந்த 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு எதிரான அமெரிக்காவின் கண்டனத்தை இராஜாங்க செயலாளர் மீண்டும் வலியுறுத்தினார்.
இந்த தாக்குதல்களில் ஐந்து அமெரிக்கர்களும் கொல்லப்பட்டிருந்தனர். அத்துடன், பயங்கரவாத்திற்கு எதிரான இலங்கையின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் உறுதியான ஆதரவையும் அவர் மீள வலியுறுத்தினார்.
குண்டு வெடிப்புகளை அடுத்து அமெரிக்கா வழங்கியிருந்த ஒத்துழைப்புகளுக்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மாரப்பன நன்றியை தெரிவித்துள்ளதுடன், எதிர்காலத்தில் இடம்பெறக் கூடிய தாக்குதல்களை தடுத்துக் கொள்வதற்கான பங்காண்மையை மேலும் ஆழப்படுத்திக் கொள்வதிலான இலங்கையின் ஆர்வத்தையும் அவர் வெளியிட்டார்.
பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நல்லிணக்கத்துக்கான இலங்கையின் புதுப்பிக்கப்பட்ட உறுதிப்பாடுகளையும் இராஜாங்க செயலாளர் பொம்பேயோ வரவேற்றார்.