மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக இம்ரான் கான் தெரிவிப்பு

(FASTNEWS | COLOMBO) – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் என பாகிஸ்தான் ஊடகத்தை மேற்கோள்காட்டி இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

காஷ்மீர் பிரச்சினை உட்பட சமரசம் செய்யக்கூடிய அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக இம்ரான் கான் குறிப்பிட்டுள்ள நிலையில், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையே, பிராந்திய அபிவிருத்திக்கும், இரண்டு நாடுகளினதும் மக்களினது வறுமை நிலையை போக்குவதற்கும் ஒரே தீர்வாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றமைக்கு இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிர்கிஸ்தான் தலைநகர் பிஸ்கேக்கில் இடம்பெறவுள்ள சங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் மாநாட்டில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் எவ்வித சந்திப்பும் இடம்பெற மாட்டாது என இந்தியா அறிவித்துள்ள நிலையில், குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.