பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளார் யாசிர் ஷா. டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் 3–வது இடம் வகிக்கிறார்.
கடந்த மாதம் 13ம் திகதி அபுதாபியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2–வது ஒரு நாள் போட்டியில் விளையாடியபோது அவரிடம் சிறுநீர் மாதிரி சேகரிக்கப்பட்டு ஊக்கமருந்து சோதனைக்கு அனுப்பப்பட்டது.
இதில், ‘குளோர்த்தலிடோன்’ என்ற ஊக்கமருந்தை அவர் பயன்படுத்தி இருப்பது தெரிய வந்தது. உலக ஊக்கமருந்து தடுப்பு கழகத்தால் பயன்படுத்தக் கூடாது என்று தடை செய்யப்பட்ட மருந்துகள் பட்டியலில் ‘குளோர்த்தலிடோன்’ உள்ளது. இதையடுத்து யாசிர் ஷா உடனடியாக கிரிக்கெட்டில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
அடுத்ததாக 2–வது கட்ட சோதனையை (பி மாதிரி) நடத்தும்படி அவர் கோரினால், அதன் முடிவின் அடிப்படையில் அவர் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது தெரிய வரும்.
ஒருவேளை ‘பி’ மாதிரி சோதனையில் அவர் ஊக்க மருந்து எதுவும் உபயோகப்படுத்தவில்லை என்ற முடிவு வந்தால், அவர் மீதான இடைநீக்கம் உடனடியாக விலக்கி கொள்ளப்படும்.
யாசிர் ஷா மீதான தடையால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் அதிர்ச்சி அடைந்தது. அணியின் முன்னணி பந்து வீச்சாளரான அவர் மீதான தடையை நீக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசித்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் யாசிர் ஷா ஊக்க மருந்து விவகாரத்தில் விளக்கம் அளித்து உள்ளது.
யாசின்ஷாவின் மனைவி ரத்த கொதிப்புக்கு மாத்திரைகளை பயன்படுத்தி வருகிறார். அந்த மாத்திரைகளை யாசிர் ஷா தெரியாமல் சாப்பிட்டு விட்டார். அதில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து இருந்தது அவருக்கு தெரியாது. அவர் உள்நோக்கத்துடன் அதை பயன்படுத்தவில்லை. தவறாக சாப்பிட்டு விட்டார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சகாரியார்கான் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், எங்களது டாக்டர்கள் பி மாதிரி சோதனைக்கு எதிராக உள்ளனர். எனவே அதற்கு பதிலாக யாசிர் ஷா தெரியாமல் மருந்தை பயன்படுத்தியதை அவரது சார்பாக மனுவாக தாக்கல் செய்வோம்.
அறியாமல் செய்த தவறால் அவருக்கு கருணை அடிப்படையில் குறைந்த தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.