பிரபல பாடகர் எஸ்.ஜி.சாந்தன் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று(26) உயிரிழந்துள்ளார்.
சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த சாந்தன் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சையின் பலனின்றி அவர் அவர் உயிரிழந்துள்ளார்.
சிறந்த பாடகரான நாடகக் கலைஞர் எஸ்.ஜி.சாந்தன், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பிரதான பாடகராக விளங்கினார்.
1995 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்தின் பிரபல நட்சத்திரப் பாடகராக விளங்கிய இவர், சிறந்த நடிகராகவும் காணப்பட்டார்.முதன் முதலில் 1972 இல் கொழும்பு, செட்டித்தெரு கதிரேசன் ஆலயத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்வையிடச் சென்றபோது அங்கு பாடும் வாய்ப்பு கிடைத்தது.
இதன்போது ‘மருதமலை மாமணியே முருகையா’ என்ற பாடலைப் பாடி மிகுந்த வரவேற்பைப் பெற்றுக் கொண்டார். இதுவே இவரது கலைப்பயணத்தின் ஆரம்பமாக அமைந்ததுடன் இது இவரது முதல் மேடை அனுபவமாகவும் அமைந்தது.
இதன் பின்னர் இவர் வீதியில் செல்லும் போது இவரை அழைத்து தம்பி அந்த ‘மருதமலைப் பாடலை’ பாடு என்று இவரது இரசிகர்கள் கேட்கத் தொடங்கி விட்டார்கள்.இதன் பின்னர் அந்தத் தெருவுக்கு வரும் கத்தார் வீடு ஜேசுரட்ணம் என்பவர் இவரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அழைத்துச் சென்று சிறுவர் மலரில் பாடவைத்தார்.
அதிலிருந்து வானொலி நிகழ்ச்சியில் நாடகத்திலும் நடிக்க ஆரம்பித்திருந்தார்.1977 இல் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்த இவர், 1981இல் கண்ணன் இசைக்குழுவுடன் இணைந்து பாட ஆரம்பித்தார்.
அந்த இசைக்குழு 1982 இல் கலைக்கப்பட்டதன் பின் தனது பெயரிலேயே சாந்தன் இசைக்குழு என்ற பெயரில் இசைக்குழுவை ஆரம்பித்து அதன் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.