யாழ்.பல்கலைக்கழத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற மாணவர்களுக்கிடையிலான கலவரத்தையடுத்து பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் உட்பட அனைத்து பீடங்களினதும் கல்வி நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த இச்சம்பவத்தையடுத்து இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழகத்தில் விஷேட பேரவைக் கூட்டமொன்று இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் இக்கூட்டத்தின் ஊடாக யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் உட்பட அனைத்து பீடங்களையும் தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டு அது தொடர்பான அறிவுறுத்தல் பல்கலைக்கழக பதிவாளரால் வெளியிடப்பட்டது.
மேலும் விரிவுரையாளர்களும், மாணவர்களும் அனைத்து பீடங்களின் கல்விசார் நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்திருப்பதாகவும் மேலும் பல்கலைக்கழக நிர்வாகம் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு ஏற்ற பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி கொடுக்கும் என்பதனையும் அனைத்து மாணவர்களுக்கும் அவர்தம் பெற்றோர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் தெரிவிப்பதாக பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது