பண மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ மற்றும் மூவர் வைக்கப்பட்டுள்ள விளக்கமறியல் சிறைச்சாலைத் தொகுதி மற்றும் அதற்கு அண்டிய பகுதிகள், தடை செய்யப்பட்ட பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம், யோஷித உட்பட விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள நால்வரும், சிறைக்காவலர்கள் மூலம் 24 மணிநேர கண்காணிப்பில் இருப்பர் என்றும் யோஷித்தவை பார்ப்பதற்காக வருபவர்களை சந்திப்பதற்கு அவர் செல்லும் போது, அவருடன் ஒரு சிறைக் காவலர் எப்போதும் செல்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தடை செய்யப்பட்ட இடத்தை தாண்டி இந்த நான்கு சந்தேக நபர்களும் வெளியில் செல்வதாக இருந்தால், சிறைக்காவலர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்ட பின்னரே, அவர்களுக்கு வெளியில் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தெரியவருகின்றது.
சமீபத்தில், யோஷித ராஜபக்ஷவின் சிறைத்தொகுதிக்கு அருகில் இருந்து தொலைபேசியொன்றை கண்டெடுக்கப்பட்ட பின்னரே இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.