ரபாடா’வின் போட்டித் தடை நீக்கம் குறித்து ஸ்மித் விமர்சனம்..

தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடாவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை மீளாய்வின் பின்னர் நீக்கப்பட்டமை தொடர்பில், அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவன் சுமித் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 02வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது, ஸ்டீவன் சுமித்தை ஆட்டமிழக்கச் செய்த ரபாடா, அவரிடம் மைதானத்தில் மையத்தில் வைத்து, எல்லை மீறி ஆவேசத்தை வெளிப்படுத்தியதாக ராபாட மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தநிலையில் ஐசிசி இனால் அவருக்கு 02 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது.

இதற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டில் அவர் மீதான குற்றச்சாட்டு நிராகரிக்கப்பட்டதுடன், போட்டித் தடையும் நீக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த விசாரணை மீளாய்வின் போது, பாதிக்கப்பட்ட இரண்டாம் தரப்பின் கருத்துக்களை விசாரணையாளர் கேட்டிருக்கவில்லை என சுமித் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் ஆட்டமிழக்கச் செய்த ஒருவர், மைதானத்தில் மையத்தில் தமது சந்தோசத்தை வெளிப்படுத்தக்கூடிய எல்லை குறித்தும் தற்போது கேள்வி எழுந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் 2011ம் ஆண்டுக்குப் பின்னர், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, போட்டி நடுவரின் விசாரணையின் பின்னர் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக ஒரேயொரு முறை மாத்திரமே மேன்முறையீடு செய்துள்ளது.

ஆனால் ரபாடாவிற்கு வழங்கப்பட்டுள்ள மீளாய்வுத் தீர்ப்பின் அடிப்படையில், குற்றச்சாட்டுக்கு உள்ளாகி தண்டிக்கப்படுகின்ற வீரர்கள் எதிர்காலத்தில் அதிக அளவில் மீள்முறையீட்டை மேற்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்றும் ஸ்டீவன் சுமித் குற்றஞ்சாட்டி உள்ளார்.