கிரிக்கெட் வீரர் ஆடுகளத்தில் மோசமாக நடந்து கொள்ளும் விதத்தை அடிப்படையாக வைத்து அவர்களிற்கு புள்ளிகள் வழங்கி தண்டிக்கும் ஐசிசியின் நடைமுறை நியாயமற்றது என தென்னாபிரிக்க அணியின் தலைவர் டு பிளசிஸ் தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடாவிற்கு அவர் ஆடுகளத்தில் நடந்து கொண்ட விதத்தினை அடிப்படையாக வைத்து ஐசிசி இரு போட்டி தடையை விதித்துள்ள நிலையிலேயே டு பிளசிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
ஐசிசி அதிகாரிகளால் வீரர்கள் உன்னிப்பாக அவதானிக்கப்படுவது அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர் வெவ்வேறு நடுவர்களும் வெவ்வேறு ஆட்ட மத்தியஸ்தர்களும் வெவ்வேறு விதமான தீர்ப்புகளை வழங்குவதற்கான வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து அதிகம் பேசப்படுகின்றது. என்னைப் பொறுத்தவரை வீரர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவது டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கிய பகுதி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரபாடா 15 ஓவர்கள் ஒருவரை வீழ்த்துவதற்காக வேகமாக ஓடி பந்து வீசிய பின்னர் அவரை ஆட்டமிழக்கச் செய்த பின்னர் அவர் தனது உணர்வை வெளிப்படுத்த வேண்டும் அதற்காக அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் தென்னாபிரிக்க அணித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு செய்ய அனுமதிக்காத பட்சத்தில் பந்து வீசும் இயந்திரத்தையும் இயந்திர மனிதனையும் வைத்து கிரிக்கெட் விளையாடலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
-Rizmira