(FASTNEWS | COLOMBO) – ப்ரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற ப்ரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 12ஆவது தடவையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.
‘க்ராண்ட் ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற ப்ரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி நேற்று(09) இடம்பெற்றது. அதில் நடப்பு சாம்பியனும், 2 ஆம் நிலை வீரருமான ஸ்பெய்னின் ரபேல் நடாலும், 4ஆம் நிலை வீரரான ஒஸ்ட்ரியாவின் டொமினிக் திம்மும் விளையாடினர்.
குறித்த இந்தப் போட்டியில், நடால் 6:3, 5:7, 6:1, 6:1 என்ற செட் கணக்கில் டொமினிக் திம்மை வீழ்த்தி 12 ஆவது முறையாகவும் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை கைப்பற்றினார்.
இதன் மூலம் குறிப்பிட்ட ஒரு க்ராண்ட் ஸ்லாம் பட்டத்தை அதிக தடவைகள் வென்றவர் என்ற சாதனையை ரபேல் நடால் படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் அவுஸ்திரேலிய வீராங்கனை மார்கரெட் கோர்ட் அவுஸ்திரேலிய ஓபனை 11 தடவைகள் வென்றதே சாதனையாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.