ரம்யா கிருஷ்ணனை பொம்பள கமல்ஹாசன் என்று கூறிய இயக்குனர்…

`தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பேசிய விக்னேஷ் சிவன் ரம்யா கிருஷ்ணன் கமல்ஹாசன் போன்று வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவதாக கூறினார்.

தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் சூர்யா, தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், தம்பி ராமையா, சுரேஷ் மேனன், இயக்குநர் விக்னேஷ் சிவன், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், கலை இயக்குநர் கிரண் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசிய போது,

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தான் `தானா சேர்ந்த கூட்டம்’ சிறப்பாக உருவாகுவதற்கு முக்கியமான காரணம். நான் `ஸ்பெஷல் 26′ படத்தின் உரிமையை வாங்கி, அந்த படத்தின் முக்கியமான கருவை மட்டும் எடுத்து, புதிதாக ஒரு திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்கியுள்ளேன்.

கீர்த்தி சுரேஷ் என்னை பிரதர், பிரதர் என்று அழுத்தி கூறிவிட்டார். நீங்கள் பயப்பட வேண்டாம். பாதுகாப்பான ஒரு இடத்தில் தான் இருக்கிறீர்கள். ரம்யா கிருஷ்ணன், கமல் ஹாசன் மாதிரி மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கக்கூடியவர். இவரை பொம்பள கமல்ஹாசன் என்று கூறலாம். அதேபோல் தம்பி ராமையா இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். இவரை ஒரு ஆம்பள மனோரமா என்று கூறலாம். அந்த அளவுக்கு அவர் பிசியாக நடித்து வருகிறார்.

அனிருத்தின் இசை படத்துக்கு மிகப்பெரிய பலம். தற்போது வரை எனது படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் இசை ஒரு முக்கிய பங்காற்றி இருக்கிறது என்று கூறலாம்.