சுற்றுப்புற காற்று மாசுபட்டால் எவ்வளவு பாதிப்பு தருகிறதோ, அதேபோல் காதினால் கேட்கும் ஒலி மாசினால், நிறைய பாதிப்புகள் வருகிறது. கடும் ட்ராஃபிக் சப்தத்தில் உள்ள ஹைவே ரோட்டின் அருகே வீடுகள் வாங்கப் போகிறீர்களேயானால் நீங்கள் சற்று யோசிக்க வேண்டும். ஏனெனில் தொடர்ந்து வாகன இரைச்சலுக்கிடையே வாழ்ந்தால், ஹார்ட் அட்டாக் ஆபத்து வரும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
புதிய ஆய்வு :
ஜெர்மனில் உள்ள ட்ரெஸ்டென் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் ஆண்ட்ரியாஸ் செய்ட்லர் மற்றும் இணை ஆராய்ச்சியாளர்களும் சேர்ந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சுமார் 40 வயதிற்கு மேற்பட்ட ஒரு மில்லியன் ஜெர்மன் மக்களின் ஆயுள் காப்பீட்டு அலுவலகத்திலிருந்து எடுக்கப்பட தகவல்களின் அடிப்படையில் ஆய்வினை மேற்கொண்டனர். இவர்களில் 2015- 2016 ஆம் ஆண்டு வரை ஹார்ட் அட்டாக்கில் இறந்தவர்களை கணக்கெடுப்பில் எடுத்தபோது, அவர்கள் அதிகப்படியான ஒலி மாசினால்தான் இறந்ததாக தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவரும் மிகவும் பரபரப்பான நெரிசல் மிகுந்த வாகன இரைச்சல்களுக்கிடையே வசித்தவர்கள்.
விமான இரைச்சல்களை விடவும் சாலை மற்றும் ரயில் இரைச்சல்கள் அதிகம். மேலும் விமான இரைச்சல் தொடர்ந்து கேட்கப்படுவதில்லை. அவை 65 டெசிபலுக்கு குறைவான இரைச்சலையே தருகிறது. ஆகவே விமான ஒலியைக் காட்டிலும் சாலை வாகனங்கள் ஆபத்து தரக் கூடியது எனவும் கூறியிருக்கின்றனர்.
அந்தந்த நகரங்களில் வாகன இரைச்சலை கட்டுப்படுத்த தக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை சுற்றுப்புறத்தையும் உடல் நலத்தையும் நிச்சயம் பாதிக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.