முன்னாள் நிதியமைச்சரும் தற்போதைய வௌிவிவகார அமைச்சருமாகிய ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை பாராளுமன்றத்தில் கவனத்தில் கொள்ள இன்னும் எட்டு நாட்களாகும் என தெரிய வந்துள்ளது.
குறித்த இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்ட பின்னர், அதன் அனுகூலங்கள் குறித்து, முதலில் சபாநாயகர் தீர்மானிக்க வேண்டும் என, பாராளுமன்ற பிரதி செயலாளர் சட்டத்தரணி நீல் இத்தவெல குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் அவை மாற்றம் செய்யப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், தினம் குறிப்பிடாது குறித்த அந்த பிரேரணையை பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இணைக்க வேண்டும் எனவும், அன்றிலிருந்து ஏழு நாட்களின் பின் இடம்பெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள தினம் தீர்மானிக்கப்படும்.
இதற்கமைய, அடுத்த சபை அமர்வுகளில், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என, பாராளுமன்ற பிரதி செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
(rizmira)