முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை மீண்டும் அமைச்சராக நியமிக்க கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், கடந்த 04ம் திகதி கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு முடிவு செய்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களாக நவீன் திசநாயக்க, அகில விராஜ் காரியவசம், ரஞ்சித் மத்துமபண்டார, கபீர் காசிம், ஹரின் பெர்னான்டோ, ருவான் விஜேவர்த்தன, அலவத்துவல, அஜித் பெரேரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மீண்டும் அமைச்சராக தன்னை நியமிப்பதற்கு எந்தவித எதிர்ப்பும் இல்லையென ஜனாதிபதி தனக்கு அறிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சி அரசியல் சபைக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இதனையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக காணப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த அறிக்கை அடுத்தவாரம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பின்னணியில், ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்கவுக்கு மீண்டும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சொன்று வழங்கப்படவுள்ளமை உறுதியாகியுள்ளதாகவும் தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.