ரஷ்ய நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் விளாடிமிர் புடினின் ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
ரஷ்யாவில் டுமா என்றழைக்கப்படும் நாடாளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. 450 உறுப்பினர்கள் இடத்துக்கு ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சியும், அதை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி, எல்டிபிஆர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.
வாக்குப்பதிவில் மொத்தம் 47.5 சதவீத வாக்குகளே பதிவாகின. வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது.
90 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சி 54.2 சதவீத வாக்குளை பெற்று வெற்றியை உறுதி செய்தது. 343 இடங்களில் வெற்றி பெறுவதை உறுதி செய்த அக்கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது.
கடந்த 2011ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சுமார் 60 சதவீத வாக்குகள் பதிவாகின அதில், 49 சதவீத வாக்குகளை பெற்ற ஐக்கிய ரஷ்யா கட்சி 238 இடங்களில் வெற்றி பெற்றது.
இம்முறை அமோக வெற்றி பெற்றதற்காக, மாஸ்கோவில் உள்ள கட்சி தலைமையகத்துக்கு வந்த அதிபர் விளாடிமிர் புடின், பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் ஆகியோர் வெற்றிக்காக பாடுபட்ட கட்சி தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.
புடின் 2008 முதல் 2012 வரை பிரதமராகவும், 2012 முதல் தற்போது வரை அதிபராகவும் தொடர்ந்து 17 ஆண்டாக அதிகாரத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.