ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ் பர்க் நகரில் உள்ள சுரங்க மெட்ரோ ரயிலில் நடந்த குண்டுவெடிப்புக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை பெற்று தருவதில் ரஷ்யாவுக்கு அமெரிக்கா உதவும் எனவும் அவர் உறுதி அளித்தார்.
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவுக்கு அடுத்த படியாக 2-வது பெரிய நகரம் செயின்ட் பீட்டர்ஸ் பர்க். அங்கு சுரங்க மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் அங்கு 2 மெட்ரோ ரயில் நிலையங்களில் 2 பெட்டிகளில் குண்டுகள் வெடித்தன. அதில், 11 பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இக்குண்டு வெடிப்புக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆனால் இத்தாக்குதல் மத்திய ஆசிய நாடுகளை சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என ரஷ்யா சந்தேகிக்கிறது.
இக்குண்டு வெடிப்புகள் தற்கொலை தாக்குதலாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் இதை ஐ.எஸ்.தீவிரவாதிகள் நடத்தியிருக்கலாம் என்று கருத்தும் நிலவுகிறது. சிரீயாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்குவதில் ரஷ்யா தீவிரமாக உள்ளது. அதற்கு பழிதீர்க்கும் வகையில் இத்தாக்குதல் நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
மெட்ரோ ரயில்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்ற போது ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் செயின்ட் பீட்டார்ஸ் பர்க் நகரில் இருந்துள்ளார்.