அம்பாறை மாவட்ட கரும்பு உற்பத்தியாளர்களின் பிரச்சினையத் தீர்ப்பதற்காக, அமைச்சரவைக்கு பத்திரம் ஒன்றை சமர்ப்பிப்பதற்கு தாம் முடிவு செய்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட கரும்பு உற்பத்தியாளர்களையும், ஹிங்குரானை சீனித் தொழிற்சாலையையும் நிருவகிக்கும் கல்லோயா பிளான்டேசன் நிருவாகிகளையும், அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்றையதினம்(01) அம்பாறைக் கச்சேரியில் சந்தித்து, இரு தரப்பினரினதும் கருத்துக்களை அறிந்து கொண்டார்.
மேலும், அமைச்சர் அங்கு உரையாற்றுகையில்;
நீடித்துச் செல்லும் கரும்பு உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு நாம் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். ஏற்கனவே நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் தலைமையில், கொழும்பில் இடம்பெற்ற இரண்டு சந்திப்புகளில், பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அதற்குப் பரிகாரம் காணக்கூடிய சில வழிவகைகளை உருவாக்கினோம்.
குறிப்பாக ஏழை விவசாயிகளின் கடன் சுமைகளைப் போக்குவதற்காக, வட்டி வீதங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், இந்தத் துறையில் அனுபவம் கொண்டவர்களை உள்ளடக்கிய சுதந்திரமான குழுவொன்றை அமைத்து, இரண்டு தரப்பினரினதும் பிரச்சினைகளை விரிவாகப் பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளளோம்.
இந்தக்குழு கரும்புச்செய்கை செய்யப்படும் இடங்களுக்குச் சென்று, பாதிக்கப்பட்ட விவசாயிகளை மாத்திரமின்றி, விளைநிலங்களையும் பார்வையிட்டு விரிவான அறிக்கை ஒன்றை எமக்குத் தர ஏற்பாடுகள் செய்யப்படும். இதன் பின்னர் அத்தனை ஆவணங்களையும் சேர்த்து, முக்கியமான பிரச்சினைகளைத் திரட்டி பத்திரம் ஒன்றைத் தயாரித்து, அமைச்சரவைக்கு நாம் சமர்ப்பிக்கவுள்ளோம் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் மேலும் தெரிவித்துள்ளார்.