சென்னையில் கடந்த 1-ந்தேதி முதல் கன மழை தொடர்ந்து பெய்து நகரத்தை வெள்ளக்காடாக்கியது. அதன்பிறகு அடையாறு, கூவம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, வீடுகளுக்குள் வெள்ளம், உடமைகள் இழப்பு என்று மக்களின் சோகம் தொடர்ந்தது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் வெள்ளம் புகுந்ததால் அவை மூடப்பட்டன.
இதனால் புதிய படங்கள் ஓடாமல் வசூலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தின. இதுபோல் கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், வேதாரண்யம், திருவாரூர், தஞ்சாவூர், நீலகிரி பகுதிகளில் உள்ள திரையரங்குகளும் முடங்கின. மதுரை, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, கோவை, சேலம், ஈரோடு மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் படங்கள் ஓடின. அங்கும் சில பகுதிகளில் மழையால் வசூல் குறைவாகவே இருந்தது. ஆர்யா-அனுஷ்கா ஜோடியாக நடித்த ‘இஞ்சி இடுப்பழகி’ மற்றும் ‘மொழி’ படம் மூலம் பிரபலமான ராதாமோகன் டைரக்டு செய்த ‘உப்பு கருவாடு’, சிவா நடித்த ‘144’ ஆகிய படங்கள் பெருமழைக்கு மூன்று நாட்கள் முன்பாக கடந்த மாதம் 27-ந்தேதியன்று வெளியானது.
இந்த 3 படங்களும் மழை வெள்ளத்தால் பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளதாக திரையரங்கு உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார். ‘இஞ்சி இடுப்பழகி’ பெரிய எதிர்பார்ப்பில் வந்த படம். இந்த படத்துக்காக அனுஷ்கா தனது உடல் எடையை 20 கிலோ ஏற்றி குண்டு பெண்ணாக நடித்து இருந்தார். படம் வெற்றிகரமாக ஓடும் என்று படக்குழுவினர் எதிர்பார்ப்போடு இருந்தனர்.
மழை வெள்ளம் அவர்கள் நம்பிக்கையை தகர்த்து விட்டது. மழைநீர் வடிந்து விடும் என்ற நம்பிக்கையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பாபிசிம்ஹாவின் ‘உறுமீன்’ படம் வெளிவந்தது. ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி வெள்ளம் வடியவில்லை. சென்னை மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவும் இல்லை. இதனால் அந்த படத்தின் வசூலும் பாதிக்கப்பட்டு உள்ளது. கமல்ஹாசனின் ‘தூங்காவனம்’, அஜீத்குமாரின் ‘வேதாளம்’ படங்கள் இரண்டு வாரங்கள் நன்றாக ஓடிக்கொண்டு இருந்தன. மூன்றாவது வாரத்தில் மழை ஆரம்பித்ததால் லாபத்தின் சதவீதம் குறைந்தது.
திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க முன்னாள் தலைவர் கலைப்புலி சேகரன் கூறும்போது ‘மழை வெள்ளம், தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருந்த படங்களின் வசூலில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் ரூ.25 கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது’ என்றார்.