கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களின் விருப்பு வாக்குகளை மீள எண்ணி, புதிய பெறுபேறை வௌியிடுமாறு உத்தரவிடக் கோரி, முன்னாள் அமைச்சர் ரோசி சேனாநாயக்கவால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று(16) உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
விருப்பு வாக்கு எண்ணும் நடவடிக்கைகளில் காணப்பட்ட குறைபாடு காரணமாக தான் பாராளுமன்றத்துக்கு செல்ல முடியாமல் போனதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
எனவே அதனை மீண்டும் எண்ணி, புதிய பெறுபேறை வௌியிட தேர்தல்கள் ஆணையாளருக்கு உத்தரவிடுமாறும், குறித்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபரால் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டமை குறித்த ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
விடயங்களை ஆராய்ந்த பிரதம நீதியரசர் கே.ஶ்ரீபவன், குறித்த வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் சரியாகவே நடைபெற்றதாக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஆஜரான பிரதிநிதிகள், ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே குறித்த வழக்கை தள்ளுபடி செய்து அவர் உத்தரவிட்டுள்ளார்.