ரோஹித அனுப்பிய செயற்கைகோளுக்கு என்ன நடந்தது?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகனான ரோஹித ராஜபக்சவினால் விண்ணுக்கு ஏவப்பட்ட தொலைத்தொடர்பு செயற்கைக்கோளிற்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

குறித்த தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் சீனாவில் நிர்மாணிக்கப்பட்ட போதிலும் ரோஹிதவினால் அவ்வாறான தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஒன்று நிர்மாணிக்கப்படவில்லை என அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னயை ஆட்சியின் போது ஊடக சுதந்திரம் இல்லாமையினால் இது தொடர்பில் எந்தவொரு ஊடகத்திலும் வெளியிடாமல் இருப்பதற்கு ராஜபக்ச ஆட்சியாளர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளர்.

இவ்வாறு அரசாங்க பணத்தை கொள்ளையடித்து ஊடக பிரச்சாரமாக மாத்திரம் மேற்கொள்ளப்பட்ட இந்த தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் தற்போது வரையில் இது தொடர்பிலான ஊழல் மோசடிகள் குறித்து பல்வேறு தகவல் வெளியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

தந்தை மற்றும் புதல்வர்களால் மேற்கொள்ளப்பட்ட மோசடிகள் வெளியாகும் போது, இது குறித்து தெரியாதென கூறி சட்டத்தில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக காணப்படுகின்ற சந்தர்ப்பங்களை தடுப்பதற்கு முதலில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளர்.

சீனாவினால் ஏவப்பட்ட செயற்கை கோளினால் இலங்கைக்கு எந்தவித பிரயோசனமும் இல்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த செயற்கைக்கோளின் ஒரு பகுதியில் இலங்கை தேசியக் கொடி மற்றும் “ஆயுபோவன்” என்ற வார்த்தை மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்காக 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை திறைசேரியில் இருந்து விடுவித்தமை மற்றும் பயனற்ற வகையில் அந்த பணத்தை முதலீடு செய்தமை தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு விசேட விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.