றகர் வீரர் வசீம் தாஜுதீனின் மரணம் கொலையே

பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீனை கொலை குறித்து விசாரணை நடத்தி வருவதாக சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

தாஜூடீன் மரணம் விபத்தால் நிகழ்ந்ததாக கூறப்பட்டாலும் அவர் விபத்தில் பலியாகவில்லை எனவும் கொலை செய்யப்பட்டுள்ளாரென, கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக இரகசியப் பொலிஸார் மேற்கொண்டு வரும் விசாரணைகள் பெரும்பாலும் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அவற்றை வெளியிட்டால், இறுதியான விசாரணைகளுக்கு அது சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும் என்பதால் அதை செய்யவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

2012ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி அதிகாலை நாராஹேன்பிட்டி நகரில் பிரபல றகர் விளையாட்டு வீரரான முஹமட் வசீம் தாஜூடீன் தனது வாகனத்திற்குள் இருந்து எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

தாஜூடீனின் மரணம் வாகன விபத்தினால் ஏற்பட்டது என்று அன்றைய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக இருந்த அஜித் ரோஹன குறிப்பிட்டிருந்தமை குறிபிடத்தக்கது.

தாஜூடீன் பயணித்த கார் மதில் ஒன்றில் மோதியத்தால், கார் தீப்பிடித்ததில் அவர் இறந்து போனதாகவும் அஜித் ரோஹன கூறியிருந்தார்.

பின்னர் குறித்த மரணம் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.