றகர் வீரர் வஸீமினது உடற்பாகங்கள் டீ.என்.ஏ பரிசோதனைக்கு

மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பிரபல றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீனின் உடற்பாகங்களை தனது நிறுவனத்தினூடாக டீ.என். ஏ பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாக மரபணு பரிசோதனை நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி ருவான் ஜே.இலப்பரும, கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸூக்கு அறிவித்துள்ளார்.

மேலும், டீ.என்.ஏ பரிசோதனை நிறைவு பெற்ற பின்னர், கூடிய விரைவில் அதற்கான அறிக்கை, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் இதன் போது மேலும்  தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் டீ.என்.ஏ பரிசோதனைக்கான உடற்பாகங்கள் தொடர்பிலான விவரங்கள், கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி ​டொக்டர் அஜித் தென்னகோனினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவருடைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு விலா எலும்புகளும் ஒரு பல்லும் பொலித்தீன்களில்  அடைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இவை சடலம் தோண்டியெடுக்கப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது  பிரேத பரிசோதனைகளின் மூலம் பெற்றப்பட்டவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், முதலாவது பிரேத பரிசோதனையின் மூலம் பெற்றப்பட்ட தசையுடன் கூடிய ஒரு தொகுதி விலா எழும்பும் இரண்டு விலா எழும்புகளையும் தாடையில் உள்ள திசுக்களுடன் கூடிய பல்லையும் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அனுப்பி வைத்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாஜூதீனின் தாய் பாத்திமா  பாரிசாவிடமிருந்து இரத்த மாதிரிகளை கடந்த 14ஆம் திகதியன்று தனது கம்பனி எடுத்ததாகவும் இந்த இரண்டு பிரேத பரிசோதனைகளும் கொழும்பு முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி பேராசிரியர் ஆனந்த சமரசிங்க மற்றும்; கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் அஜித் தென்னகோனாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

(riz)