லக்கல பொலிஸ் நிலையத்தில் ஆயுதங்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரிகளின் இரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்படவுள்ளன.
கடந்த 14ஆம் திகதி லக்கல பொலிஸ் நிலையத்தில் ஆயுத களஞ்சியசாலையில் இருந்த துப்பாக்கிகள் பல காணாமல் போயிருந்தன.
குறித்த இந்த சம்பவம் தொடர்பாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் ஆரம்பக் கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் இடம்பெற்ற அன்று பொலிஸ் அதிகாரிகள் மதுபோதையில் இருந்ததாக தகவல்கள் கிடைத்தமைக்கு அமைய இவர்கள் நீதிமன்ற வைத்தியரின் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
எனினும் மேலதிக பரிசோதனைக்காக இந்த பொலிஸ் அதிகாரிகளின் இரத்தமாதிரிகள் அரச பகுப்பாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.