லசந்த கொலை – தீவிர விசாரணைகள் ஆரம்பம்

லசந்த விக்கிரமதுங்க கொலை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பதவி வகித்த முன்னாள் இராணுவத் தளபதியின் பாதுகாப்புக்கு இருந்த கமான்டோ படையினரின் பெயர் பட்டியல் மற்றும் அவர்களின் தகவல்களை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த தகவல்களை கொமான்டோ படைபிரிவின் பொறுப்பதிகாரியின் ஊடாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கல்கிஸ்ஸ நீதவான் நீதிபதி மொஹமட் சஹாப்தீன் இராணுவத்தளபதிக்கு நேற்றைய தினம் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை சம்பந்தமான விசாரணைகளை முன்னெடுத்து வரும் இரகசியப் பொலிஸாரின் வேண்டுகோளுக்கு அமைய இந்த உத்தரவினை நீதவான் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் லசந்த விக்கிரமதுங்கவின் மரண விசாரணைகளை மேற்கொண்ட களுபோவிலை வைத்தியசாலையின் முன்னாள் சட்டவைத்திய அதிகாரி சுனில் குமாரவை இரகசியப் பொலிஸார் அழைக்கும் போது வருவதற்கு உத்தரவிடுமாறு நீதவானிடம் இரகசிப் பொலிஸார் கோரிக்கை விடுத்ததுடன்,இரகசியப் பொலிஸாரின் அனைத்து கோரிக்கைகளுக்கும் நீதவான் உத்தரவு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.