ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடியை இங்கிலாந்தில் இருந்து நாடுகடத்தி இந்தியாவுக்கு அழைத்து வர அமலாக்க துறைக்கு மும்பை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் இதற்கான அனுமதியை அளித்திருக்கிறது. இதே நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் லலித் மோடிக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடியாணை பிறபித்தது.
லலித் மோடியை கொண்டு வர இன்டர்போல் உதவியை அமலாக்கத்துறை நாடியது. ஆனாலும் அது உரிய பலன் அளிக்காததால் மும்பை நீதிமன்றத்தை அமலாக்கத்துறை நாடியது.
நீதிமன்ற அனுமதியை அடுத்து லலித் மோடியை இந்தியா கொண்டு வருவது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு நீதிமன்ற உத்தரவு கடிதத்தை அனுப்பி வைக்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐ.பி.எல். போட்டி தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அதன் தலைவராக இருந்த லலித் மோடி மீது கடந்த 2012-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து இந்தியாவில் இருந்து வெளியேறிய அவர் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.