மால்டாவில் வலுக்கட்டாயமாக தரையிறக்கப்பட்ட, லிபியா பயணிகள் விமான கடத்தல் சம்பவம் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது.
விமானத்தை கட்டுப்பாட்டில் எடுத்த இரு கடத்தல் காரர்கள் விலங்கிடப்பட்டு அழைத்து செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னர், விமானத்தில் பயணம் செய்த அனைத்து பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் பத்திரமாக வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.
கடத்தல்காரர்கள் மால்டாவில் தஞ்சக்கோரிக்கை விடுத்திருந்ததாக கூறப்பட்டது.
லிபியாவின் உள்நாட்டு சேவையான அந்த விமானம் கடத்தப்பட்டபோது, நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளும் விமான உழியர்களும் இருந்தனர். 118 பேர் இருந்ததாக முன்னர் வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏர்பஸ் ஏ 320 விமானம், ஆஃப்ரிகியா ஏர்வேஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமானது. உள்நாட்டில் பறந்து கொண்டிருந்தபோது, அது கடத்தப்பட்டது.
விமானத்தை குண்டு வைத்துத் தகர்த்து விடுவதாக மிரட்டி, இரண்டு கடத்தல்காரர்கள் அந்த விமானத்தைக் கடத்தியிருக்கலாம் என ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவித்தன.
அந்த விமானம், மால்டா சர்வதேச விமான நிலையத்துக்கு வலுக்கட்டாயமாக கடத்தல்காரர்களால் கொண்டுவரப்பட்டு தரையிறக்கப்பட்டது.
பாதுகாப்பு நடவடிக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மால்டா பிரதமர் ஜோசப் மஸ்டர் உடனடியாகத் தெரிவித்தார்.
பிறகு, கடத்தல்காரர்களுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு, முதலில் 65 பயணிகளை விடுவிக்க அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
பின்னர் சிறிது நேரத்துக்குப் பிறகு 44 பயணிகள் விடுவிக்கப்பட்டனர்.
அதற்குப் பிறகும், எவ்வளவு கடத்தல்காரர்கள் உள்ளனர் என்பது தெளிவாகவில்லை.