வங்காளதேசத்தில் ஜமாத் இ இஸ்லாமி கட்சி தலைவரும் மற்றும் வங்கதேச ஊடக அதிபருமான மிர் காசிம் அலிக்கு எதிரான போர்க்குற்ற வழக்கில் வங்காளதேச சிறப்பு தீர்ப்பாயம் முன்னர் அளித்திருந்த மரண தண்டனையை உறுதிப்படுத்தி அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது.
வங்காள தேசத்தில் 1971-ஆம் ஆண்டு, பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த சுதந்திரப் போராட்டத்தின்போது ஒரு தரப்பினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதுடன், போர்க்குற்றங்களிலும் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து, இத்தகைய போர்க்குற்றங்களை விசாரிக்க கடந்த 2010-ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
இங்கு நடைபெற்றுவரும் வழக்குகளின் விசாரணையில், பலருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சிலருக்கு மரண தண்டனையும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜமாத் இ இஸ்லாமி கட்சி தலைவரும் மற்றும் வங்கதேசத்தின் பிரபல ஊடக அதிபருமான மிர் காசிம் அலி என்பவருக்கும் மரண தண்டனை விதித்து 2-11-2014 அன்று தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.
அவர் மீது இளம் விடுதலைப் போராட்ட வீரர்கள் இருவரை சித்ரவதை செய்து, கொன்று உடல்களை சிட்டகாங் ஆற்றில் வீசியது உள்பட 14 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதில் 10 குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் மிர்ர் காசிம் அலியின் வழக்கறிஞர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கின் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளித்த நீதிபதி வங்காளதேச சிறப்பு தீர்ப்பாயம் முன்னர் அளித்திருந்த மரண தண்டனையை உறுதிப்படுத்தி உத்தரவிட்டுள்ளார்.