வசீம் தாஜுதீன் கொலை – பின்தொடர்ந்து சென்ற வாகனம் தொடர்பிலான சீ.சீ.டி.வி காட்சிகள் கொழும்பு பல்கலைக்கழகத்திடம்…

கொலை செய்யப்பட்ட றகர் வீரர் வசீம் தாஜுதீன் கொல்லப்படுவதற்கு முன்னதாக பயணம் செய்த மோட்டார் வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற வாகனம் தொடர்பிலான சீ.சீ.டி.வி காட்சிகள் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணனிப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஜெயராம் ட்ரொஸ்கீ நேற்று(19) உத்தரவிட்டுள்ளார்.

தாஜுதீனின் வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற வாகனம் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் புலனாய்வுப் பிரிவினர், குறித்த சீ.சீ.டி.வி காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டுமென நீதவானிடம் கோரியிருந்தனர்.

தாஜூடினின் வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற வாகனத்தில் சிலர் இருந்தனர் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக புலனாய்வுப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த வாகனத்தில் பயணித்தவர்கள் பற்றிய விபரங்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் கொழும்பு பல்கலைக்கழகத்திடம் சீ.சீ.டி.வி காட்சிகள் ஒப்படைக்கப்பட வேண்டுமென புலனாய்வுப் பிரிவினர் கோரியுள்ளனர்.

மேலும், பெப்ரவரி மாதம் 2ம் திகதி விசாரணைகளின் முன்னேற்றம் பற்றி அறிவிக்குமாறு புலனாய்வுப் பிரிவிற்கு நீதவான் ட்ரொஸ்கீ உத்தரவிட்டுள்ளார்.