வடக்கு கிழக்கில் விகாரைகள்; ஞானசார தேரர் கேள்வி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் செயற்படும் சட்டத்தை வடக்கு கிழக்கில் மாத்திரம் தட்டிக்கழிக்க முயற்சிப்பதே முரண்பாடாக உள்ளதென பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் தலையீட்டில் கொலம்பே மேதாலங்கார தேரரின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டதாக தெரிவித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் இது குறித்து அவர் கருத்து கூறுகையிலேயே இதனை தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், அந்த பூமி விகாரைக்கு உரித்தான பகுதியாகும். இந்துக்களுக்கு எவ்வாறு அங்கு சகல உரிமையும் உள்ளதோ அதேபோல் பௌத்தர்களுக்கும் சம உரிமை உண்டு. அங்கு எமது தேரர் ஒருவருக்கு நெருக்கடி என்றால் எம்மால் வேடிக்கை பார்க்க முடியாது.

இங்கு மேதாலங்கார தேரர் நீண்டகாலமாக இருந்தார். ஏன் வடக்கு கிழக்கில் விகாரைகளை அமைக்கக்கூடாதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை, முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் கொலம்பே மேதாலங்கார தேரரின் பூதவுடல் தகனம் செய்யப்பட்ட விடயம் குறித்து தமிழ் மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பு எழுந்துள்ளது.