வற் வரி திருத்தம் குறித்த யோசனை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிப்பு.

அமைச்சரவையில் இன்றைய தினம்(13) வற் வரி திருத்தம் குறித்த யோசனை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வற் வரி திருத்த உத்தேச சட்ட மூலம் அனுமதிக்காகவே இன்று அமைச்சரவையில் குறித்த திருத்தம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யோசனைகளும் இந்த உத்தேச திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறித்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளார்.

வற் வரி அதிகரிப்பு குறித்த சுதந்திரக் கட்சியினர் தனியான யோசனையை சமர்ப்பித்த காரணத்தினால் இணக்கப்பாட்டை எட்டும் வரையில் திருத்தச் சட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை.

சுதந்திரக் கட்சியினர் முன்வைத்த யோசனைகள் தொடர்பில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இணங்கியதனால் இன்றைய தினம் உத்தேச சட்ட மூலத்திற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைக்கும் சாத்தியம் உண்டு என அமைச்சர் மஹிந்த அமரவீர நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக இரண்டு தடவைகள் நிதி அமைச்சரினால் யோசனைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அந்த யோசனைகளில் சுதந்திரக் கட்சியினரின் பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

இதனால் அமைச்சரவையின் அங்கீகாரம் பெறுவதில் கால தாமதம் ஏற்பட்டது.

எவ்வாறெனினும், வற் வரி அதிகரிப்பு குறித்த யோசனை வரவு செலவுத் திட்டத்துடன் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என மேலும் எதிர்பார்க்கப்படுகிறது.