வஸீம் கொலை விவகாரம் – நண்பர்களின் வாக்குமூலத்தில் முரண்பட்ட கருத்து

கொலை செய்யப்பட்ட பிரபல றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜூடீனின் கொலை சம்பந்தமான உண்மையான தகவல்களை அறிந்த, அவரது நெருங்கிய நண்பர் இருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதுடன் இருவரும் முன்னுக்கு பின் முரணாக வாக்குமூலம் வழங்கியதாக தெரியவருகிறது.

தாஜூடீனின் நண்பர்கள் வாக்குமூலம் வழங்கும் போது கடும் பயத்துடனும் பதட்டத்துடனும் உண்மையான தகவல்களை மறைத்து வாக்குமூலம் வழங்கியதாக கூறப்படுகிறது.

தாஜூடீன் கொலை தொடர்பாக சந்தேகிக்கப்படும் இளம் அரசியல்வாதி மற்றும் இராணுவ அதிகாரிகளுடன் இவர்கள் தொடர்பில் இருப்பது இவர்களின் தொலைபேசி கட்டண பட்டியலை பரிசோதித்த போது உறுதியாகியுள்ளது.

அதேவேளை கொலை சம்பவம் நடைபெற்ற 2012 ஆம் ஆண்டு மே  மாதம் 17 ஆம் திகதி கிருளப்பனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய அதிகாரி, குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி, போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ஆகியோர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களை தவிர நாராஹென்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி ஆகியோரும் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிருளப்பனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியே சம்பவம் நடந்த இடத்திற்கு முதலில் விசாரணைக்கு சென்றுள்ளார்.

கொழும்பு நகருக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க அதிகாலை 3 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்திருந்தாக, பொறுப்பதிகாரி தனது பதிவேட்டில் பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சாதாரணமாக விபத்து சம்பவம் ஒன்று நடந்த இடத்திற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் சென்றது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதன் பின்னணியில் அரச சக்தி இருக்கின்றது என்பதை அப்போதே ஊடகங்களும் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.நான்கு வருடங்களின் பின்னர் அந்த சந்தேகம் உறுதியாகியுள்ளது.