(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தலுக்கான முதலாவது தபால்மூல வாக்களிப்பு நேற்று(31) நடைபெற்றபோது ஒரு வாக்களிப்பு நிலையத்தில் முறைகேடு நடந்திருப்பதாக தனக்கு தகவல் கிடைத்திருப்பதாகவும் இகுறித்த முறைகேட்டுக்கு அதிகாரி ஒருவரும் தொடர்புபட்டிருப்பதாக அறிய வருவதாகவும் தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இது தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
விசாரணையின் மூலம் குற்றம் நிருபிக்கப்பட்டால் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு மூன்று வருடகால சிறைத்தண்டனைக்காளாகும் நிலை ஏற்படுமெனவும் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
“.. நேற்று நாடு முழவதும் தபால்மூல வாக்களிப்பு இடம்பெற்றது. வாக்களிப்பு ஆரம்பமான சில மணி நேரத்துக்கிடையில் ஒரு அரச ஊழியர் தான் வாக்களிப்பதை தொலைபேசி மூலம் படமெடுத்து பகிரங்கப்படுத்தியுள்ளதாக அறிந்தேன். உடனடியாக அந்த ஊழியரின் செயற்பாடு தொடர்பில் விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். அதே சமயம் அந்த ஊழியர் அவ்வாறு நடப்பதற்கு வாக்களிப்பு நிலைய அதிகாரி ஒருவர் உடந்தையாக இருந்தாரா என்பது குறித்தும் விசாரித்தறியுமாறு பணித்துள்ளேன்.
ஜனாதிபதி தேர்தல் விதிகளை மீறுவோர் மீது கடுமையாக நடந்து கொள்ளவுள்ளேன்.
தபால்மூல வாக்களிப்பு இடம்பெறும்போது அவற்றை இலத்திரணியல் ஊடகங்கள் நேரடி ஒலி, ஒளிபரப்புச் செய்வது தப்பல்ல. ஆனால் முறைகேடுகள் இடம்பெறாத வகையில் நடந்துகொள்ள வேண்டும்..” எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.