வடமாகாண முதலமைச்சர் ‘தனது உயிருக்கு ஆபத்தை உண்டாக்குவதற்கும், அந்த பழியை விடுதலை புலிகள் மீது சுமத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அண்மையில் கூறிய கருத்தை தொடர்ந்து, முதலமைச்சரின் பாதுகாப்பை அதிகரிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 1ம் திகதி யாழ்.நகரில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் முதலமைச்சர் தனது உயிருக்கு ஆபத்தை உண்டாக்கவும், அந்த பழியை தமிழீழ விடுதலை புலிகள் மீது சுமத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக எழுத்து மூலம் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேற்படி விடயம் பெரும் சர்ச்சைகளை உருவாக்கியிருக்கும் நிலையில், தமிழரசு கட்சி மேற்படி கோரிக்கையை விடுத்திருப்பதாக கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறிய மாவை சேனாதிராஜா,
இன்றைய தினம் காலை எதிர்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தனுடன் பேசுகையில்,
“முதலமைச்சர் எமது கட்சியில் கையொப்பமிட்டு வேட்பாளராக நின்று முதலமைச்சர் ஆனவர் என்ற வகையில் அவருடைய பாதுகாப்பை மேலும் அதிகரிக்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் உடனடியாக பேசி நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளேன். அதற்கமைய உடனடியாக பேசி நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.