விஜய் சேதுபதி மீது நடவடிக்கை?

பட அதிபர்கள் சங்கத்தின் தடையை மீறி போர்ச்சுக்கல்லில் ஜூங்கா படப்பிடிப்பை நடத்தியதாகவும் அதில் விஜய் சேதுபதி கலந்து கொண்டு நடித்ததாகவும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கூறப்பட்டு உள்ளது.

‘ஜூங்கா’ படத்தை கோகுல் இயக்குகிறார். கதாநாயகியாக சாயிஷா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு போர்ச்சுக்கல்லில் நடந்து வருகிறது. பட அதிபர்கள் சங்கத்தின் தடையை மீறி ஜூங்கா படப்பிடிப்பில் விஜய்சேதுபதி கலந்து கொண்டதாக திடீர் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டு உள்ளது.

டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக கண்டித்து தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். ஒரு மாதமாக புதிய படங்களை திரைக்கு கொண்டு வரவில்லை. சினிமா படப்பிடிப்புகளையும் நிறுத்தி விட்டனர். வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் படப்பிடிப்புகளை நடத்தவும் தடை விதித்து உள்ளனர்.

இந்த தடையை மீறி போர்ச்சுக்கல்லில் ஜூங்கா படப்பிடிப்பை நடத்தியதாகவும் அதில் விஜய் சேதுபதி கலந்து கொண்டு நடித்ததாகவும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கூறப்பட்டு உள்ளது.

இதுகுறித்து படக்குழுவினர் கூறும்போது, “வேலை நிறுத்த அறிவிப்புக்கு முன்பே வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டோம். படப்பிடிப்புக்கான கட்டணத்தையும் செலுத்தி விட்டோம். விசா உள்ளிட்ட வேலைகளும் முடிந்து விட்டன.” என்றனர்.

படக்குழுவினரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பாளர்கள் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.