விமல் இன்று பாராளுமன்ற சபை அமர்வுகளில் கலந்து கொண்டமையை உறுதிப்படுத்த உத்தரவு…

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கொழும்பு பிரதம நீதவான் லால் ரணசிங்க பண்டார முன்னிலையில், இன்று(11) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் ஹுசைன் இலங்கைக்கு வந்திருந்த போது, எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமையால், மக்களுக்கு சிரமம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கறுவாத்தோட்டப் பொலிஸார் இந்த வழக்கினைத் தாக்கல் செய்திருந்தனர்.

இதேவேளை, இன்றைய வழக்கு விசாரணைகளில் முதலாவது சந்தேகநபரான விமல் வீரவங்ச ஆஜராகியிருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள வேண்டியுள்ளமையால் தன்னால் நீதிமன்றத்திற்கு வரமுடியாதுள்ளதாக, தனது சட்டத்தரணி ஊடாக ​விமல் வீரவங்ச தெரியப்படுத்தியிருந்தார்.

இதற்கமைய, இன்றைய சபை அமர்வுகளில் கலந்து கொண்டிருந்தமையை உறுதிப்படுத்தும் வகையில், பாராளுமன்ற பொதுச் செயலாளரிடம் கடிதம் ஒன்றைப் பெற்று, அடுத்த கட்ட வழக்கு விசாரணைகளின் போது விமல் வீரவங்ச சமர்ப்பிக்க வேண்டும் என, நீதவான் இதன்போது உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணைகள் மார்ச் 19ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.