ஜே.என்.பி. கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச பற்றிய சில உண்மைகளை அம்பலப்படுத்த நேரிடும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காலியில் நடைபெறவுள்ள சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்திற்கு தாம் ஆட்களை திரட்டி வருவதாக விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்திற்கு ஆதரவளிப்பது தமது கடமையாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு விமல் வீரவன்சவின் அனுமதி தமக்கு எந்த வகையிலும் தேவையில்லை என சுட்டிக்காட்டியுள்ள அவர் ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன கட்சியை முன்னோக்கி நகர்த்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
கட்சியொன்றில், கட்சித் தலைவர்கள் மாற்றமடைவது ஜனநாயக ரீதியானதே எனவும் அதில் பிழையில்லை எனவும் கூட்டு எதிர்க்கட்சிக்கு எவ்வித அரசியல் எதிர்காலமும் கிடையாது எனவும் கூட்டு எதிர்க்கட்சியினர் தமது எதிர்காலம் பற்றி கவனம் செலுத்துகின்றார்களே தவிர, சுதந்திரக் கட்சியின் எதிர்காலம் பற்றி கவனம் செலுத்தவில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.