விமான நிலையங்களில் முக்கிய பிரமுகர்களுக்கு அரச மரியாதை இரத்து…

முக்கிய பிரமுகர்களுக்கு பாகிஸ்தான் விமான நிலையங்களில் அளிக்கப்படும் அரச மரியாதை இரத்து செய்யப்படுவதாக இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்றதில் இருந்து அதிரடி சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

கவர்னர் மாளிகைகளில் ஆடம்பர வசதி கூடாது என உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி, பிரதமர், இராணுவ தலைமை தளபதி மற்றும் அரசு அதிகாரிகள் விமானத்தில் முதல் வகுப்பு பயணத்துக்கு சமீபத்தில் தடை விதித்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று மற்றொரு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

பொதுவாக விமான நிலையங்களில் அரசியல் வாதிகள் நீதிபதிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு அரச மரியாதை வழங்கப்பட்டு வருகிறது. இனி அவர்களுக்கு விமான நிலையத்தில் அரச மரியாதை வழங்க கூடாது எனவும், மீறி சிறப்பு மரியாதை அளித்தால் விமான நிலைய குடியுரிமை அதிகாரி மற்றும் ஷிப்ட் பொறுப்பு அதிகாரியும் இடைநிறுத்தப்படுவார் என உள்துறை அமைச்சகம் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது.