விரைவில் விடுதலை செய்வேன்.. ISIS குறித்து ஞானசாரவுடன் கலந்துரையாடல்..

(FASTGOSSIP | COLOMBO) – ஐ.எஸ் பயங்கரவாதிகள் தொடர்பான முக்கிய ஆவணங்களை ஞானசார தேரர், நேற்று(18) வெலிக்கடை சிறைச்சாலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்ற நிலையில், இது தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று இயக்குனர் டிலாந்த விதான, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

“.. இரகசியமான முறையில் நடைபெற்ற இந்த சந்திப்பு நீண்ட நேரமாக, சிறைச்சாலை வைத்தியசாலையின் ஜெய்லர் அறையில் நடைபெற்றது.
ஜனாதிபதிக்கும் ஞானசார தேரரும் இடையில் 45 நிமிடங்கள் தனிப்பட்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. இங்கு பேசப்பட்ட விடயங்கள் முழுமையாக எனக்கு தெரியாது. எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்த அதிகம் பேசப்பட்டது.

கடந்த காலங்களில் பொதுபல சேனா அமைப்பினால் தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பு மற்றும் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தொடர்பில் பெற்றுக் கொண்ட தகவல்கள் குறித்து ஜனாதிபதிக்கு, ஞானசார தேரர் தெரியப்படுத்தியுள்ளார்.

பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பு மற்றும் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது ஞானசார தேரரின் விடுதலை குறித்தும் பேசப்பட்டுள்ளது. மீண்டும் வந்து சந்திப்பதாக ஞானசார தேரரிடம் , ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்…” என நிறைவேற்று அதிகாரி மேலும் தெரிவித்தார்.