வில்பத்து பகுதியில் வன பாதுகாப்பு பகுதிக்குள் ஒரு அங்குலமேனும் முஸ்லிம்கள் பலாத்காரமாக குடியேறவில்லை. காட்டுப் பகுதியை அழிக்கவும் இல்லை. சூழலியலாளர்கள் எனக் கூறிக்கொண்டு இனவாதமாகவும் மதவாதமாகவும் பொய்யான குற்றச்சாட்டை செய்து வருகிறார்கள் என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வரவு – செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
முசலி மருச்சுக்கட்டி, கரடிக்குளி என்பது வன பாதுகாப்பு பகுதி அல்ல. முஸ்லிம்கள் ஏற்கனவே குடியிருந்த பகுதிகள். 1905ம் ஆண்டில் கட்டப்பட்ட பள்ளிவாசல்கள் உள்ளன. குடிமனைகள் உள்ளன.
பொய்யான குற்றச்சாட்டுக்கள் நயவஞ்சகத்தனமான போக்கும் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடைசெய்கிறது.
இது விடயத்தில் விசேட ஆணைக்குழுவொன்றை நியமித்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதியை நான் கேட்டுக்கொள்கிறேன்.
இதற்கு சூழலியலாளர்கள் எனக் கூறிக்கொண்டு சில நயவஞ்சகக் கூட்டம் எனக்கு எதிராக செயற்படுகிறது.
மஹிந்த ராஜபக்ஷ அரசிலிருந்து நான் என்று வெளியேறினேனோ அன்றிலிருந்து எனக்கெதிராக இவ்வாறான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இந்த பிரச்சினையால் 70 வீதமான மக்கள் மீளக்குடியேறாமல் புத்தளத்துக்கு திரும்பி வந்துவிட்டனர் என்றும் அமைச்சர் ரிஷாத் மேலும் கூறினார்.