வில்பத்து சரணாலயத்தைச் சூழவுள்ள, வனப் பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிப்பு…

வில்பத்து சரணாலயத்தைச் சூழவுள்ள, வனப் பாதுகாப்பு திணைக்களத்துக்குச் சொந்தமான வனப் பகுதிகளை ஒன்றிணைத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று(24) கையெழுத்திட்டுள்ளார்.

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ரஷ்யா சென்றிருக்கும் ஜனாதிபதி, நேற்று, மொஸ்கோவில் வைத்து மேற்படி அறிவித்தலுக்கான விசேட வர்த்தமானி குறிப்பில் கையெழுத்திட்டார்.

வனப் பாதுகாப்புச் சட்டத்தின் 3A பிரிவின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதோடு, மாவில்லு, வெப்பல், கரடிக்குழி, மறிச்சுக்கட்டி மற்றும் விளாத்திக்குளம் ஆகிய வனங்களை ஒன்றிணைத்து மாவில்லு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்று அறிவிக்கப்படவுள்ளது.

இந்த வனப்பகுதியின் எல்லைகளில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்படின், ஜனாதிபதியின் அனுமதியுடன் வனப் பாதுகாப்பு அமைச்சர் அதனை மேற்கொள்ளலாம் என்றும் வர்த்தமானியில் குறிப்பிடப்படவுள்ளது.

வில்பத்து சரணாலயம் மற்றும் அதைச் சுற்றியுள்ள வனப் பகுதிகளில் காடழிப்பு இடம்பெற்று வருவதாக ஊடகங்கள் சில அண்மைக் காலமாகச் சுட்டிக்காட்டி வருகின்றன.
இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகளின்போது, 2013ஆம் ஆண்டு மீளமர்வுத் தேவைகளுக்காக வழங்கப்பட்ட இடங்களைத் தவிர சட்டவிரோதமான காடழிப்பு இடம்பெறவில்லை என்பது தெரியவந்தது.

இது குறித்து கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் திகதி ஜனாதிபதிபதியின் பங்கேற்புடன் நடைபெற்ற சந்திப்பின்போது, வில்பத்து வனத்தைச் சுற்றியுள்ள வனப் பகுதிகளையும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகப் பிரகடனப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன் பேரிலேயே தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)