ரஷ்ய அதிபரான விளாடிமிர் புடினை கடுமையாக விமர்சனம் செய்த ஊடகவியலாளர் ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவை சேர்ந்த Alexander Shchetinin என்ற பிரபலமான ஊடகவியலாளர் நோவி ரீஜன் என்ற செய்தி நிறுவனத்தை தொடங்கியது மட்டுமல்லாமல், ரஷ்ய அதிபரான விளாடிமிர் புடினை கடுமையாக விமர்சனம் செய்து வந்துள்ளார்.
மேலும், வெளிவராத காரணங்களுக்காக ரஷ்ய குடியுரிமையை கைவிட்ட அவர் உக்ரைன் தலைநகரான Kiev-வில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியுள்ளார்.
இந்நிலையில், நேற்று அலெக்ஸாண்டரின் பிறந்த நாள் என்பதால் அவரை வாழ்த்துவதற்காக அவரது குடியிருப்பிற்கு நண்பர்கள் சென்றுள்ளனர்.
அப்போது, உள்ளே இருந்த அறை ஒன்றில் இருக்கையில் அமர்ந்தவாரு அலெக்ஸாண்டர் உயிரிழந்துள்ளதை பார்த்து நண்பர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அலெக்ஸாண்டரின் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. இருக்கைக்கு கீழ் துப்பாக்கி கிடந்துள்ளது.
இந்த சம்பவம் பொலிசாருக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து அவரது சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
பொலிசார் விசாரணையை தொடங்கியபோது இது ஒரு தற்கொலையாக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
மேலும், இறப்பதற்கு முன்னர் அலெக்ஸாண்டர் தனது நண்பர் ஒருவருக்கு ‘நான் தற்கொலை செய்துக்கொள்ளப்போகிறேன்’ என மின்னஞ்சல் அனுப்பியதாக கூறப்படுகிறது.
ஆனால், இது உண்மையாக இருந்தால், அந்த குறிப்பிட்ட நபர் அலெக்ஸாண்டரை காப்பாற்ற ஏன் முயலவில்லை என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
ரஷ்ய அதிபரான விளாடிமிர் புடினின் விமர்சகர் ஒருவர் மர்மமான முறையில் இறந்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், இந்த மரணம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.